Thursday, April 9, 2020

பாகவத சேஷத்வம்


மலர்: 002
நெடுமாற்கடிமை  செய்வேன்  போல்  
அவனைக்   கருத  வஞ்சித்து 
தடுமாற்றற்ற   தீக்கதிகள்  
முற்றும்  தவிர்ந்த  சதிர்  நினைந்தால் 
கொடு  மா வினையேன்  அவன்  அடியார்  அடியே 
 கூடும்  இதுவல்லால் 
விடுமாறேன்பதென் ?  அந்தோ ! 
 வியன் மூவுலகு  பெறினுமே-  திருவாய்மொழி 8.10.1

இத்திருவாய்மொழி பாகவத சேஷத்வத்தைக் கூறுகிறது. பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் உணர்த்துகிறது. பகவானிடம் பக்தி கொள்வதுடன் அவனடியார்களிடமும் (பாகவதர்களிடமும்) பக்தி கொள்ளவேண்டும். பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. பகவத் பக்தியின் உறுதியை பாகவத பக்தியே வெளிப்படுத்தும்.
आराधननां  सर्वेषां विष्णोर आराधनं परम् I

तस्मात् परतरं प्रोक्तं तदीयाराधनम् परम्  II
எல்லா ஆராதனைகளிலும் சிறந்தது விஷ்ணு ஆராதனை ஆகும் . ஆனால் அதைவிட சிறந்தது அவருடைய பக்தர்களை வணங்குவதாகும் .
संसार विष वृक्षस्य द्वे फले ह्यमृतोपमे |

कदाचित्  केशवे  भक्तिस् तद्भाक्तैर्वा  समागमः  II
ஸம்ஸாரமென்னும் விஷ மரத்திற்கு அம்ருதம் போன்ற    இரண்டு  பழங்கள் உண்டு . ஒன்று கிருஷ்ணனிடம் பக்தி . இரண்டாவது அவனுடைய பாகவதர்களுடன்சேர்க்கை .இதற்கு உதாரணமாக ராமாயணத்தில் பரதனையும் சத்ருக்ணனையும் கூறுவர். 

பகவானை ஸேவிப்பதைவிட பாகவதர்களை ஸேவிப்பது மிகவும் உயர்ந்த்து.
பகவத் சேஷத்வத்தின் எல்லை பாகவத சேஷத்வம் எனப்படுகிறது. இந்த பெரும் ஸ்ரீவைஷ்ணவ தத்வத்தை விளக்கி ஆழ்வார் கூறுவதாவது: திருவாய்மொழி 3.7
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை
பயில வினிய நம் பாற் கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே –3-7-1

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தானிலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே –3-7-9

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-
இப்படிபல பாடல்களில் ஆழ்வார் அடியார்களை 
வணங்குவதை பற்றி கூறியுள்ளார் . 
மேலும் குலசேகர ஆழ்வார் முகுந்த மாலையில்:
मज्जन्मनः फलमिदं मधुकैटभारे
मत्प्रार्थनीय मदनुग्रह एष एव ।
त्वद्भृत्यभृत्य परिचारकभृत्यभृत्य-

भृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ २१ ॥
மதுகைடபர் களுக்கு சத்ருவே! லோக நாதனே! அடியேன் ஜன்மத்துக்கு பலன் இதுதான். என்னால் பிரார்த்திக்க தக்கதாய் என் விஷயத்தில் தங்கள் செய்யவேண்டிய அனுக்கிரஹம் இதுதான் .அடியேனை தங்களுடைய தாசனுக்கு தாசனுக்கு தாசனுக்கு தாசனுக்கு தாசனுக்கு தாசனுக்கு தாசனாக திரு உள்ளம் பற்ற வேண்டும்.
 கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே