மலர்: 038
இத்திக்கால் ஏற்குமிதம்-3- அம்ருத ரஞ்சனி
மோக்ஷத்திற்கு எம்பெருமானின் அருள் இன்றியமையாதது .
முதலில் மூன்று வகையான தத்வத்தை நன்றாக அறியவேண்டும் . இவ்வாறு சித்-அசித் - ஈஸ்வரன் என்ற மூன்று தத்வத்தை அறிந்து விட்டால் நமக்கு நல்லதொரு உபாயம் அமையும்
தோன்றத் தொலையும் துயர் -4-
ஒரு மூன்று -மூன்று பதங்கள் கொண்ட திரு மந்த்ரம்
மூவிரண்டு- ஆறு பதங்கள் கொண்ட த்வயம்
முன்நான்கும் -பன்னிரண்டு பதங்கள் கொண்ட சரம ஸ்லோகம்
ரஹஸ்ய த்ரய ஞானமே சம்சாரத்தினால் ஏற்படும் மூவகை துயரங்களுக்கு மருந்தாகும்.
பெரியாழ்வார் தமது திருமொழியில் மூன்றின் பெருமையையும் “கண்டம் என்னும் கடி நகர்” பெருமாளையும் சேர்த்தே அனுபவிக்கிறார்.
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே.
திருமந்திரத்தை மூன்று சொற்களாகக்கொண்டு சேதனனின்
மூவகைத் தன்மைகளை உணர்ந்து அவற்றிற்கு இணையான
சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம், ஆகியவற்றை இணைத்துத் திரு எட்டெழுத்தை உணர்பவர்கள் ஓம்காரப் பொருளை அறிவார்கள்
. ‘அகார, உகார,மகாரமாகிய பிரணவம் நமக்குத்
தஞ்சமாகிய பொருளையே கூறுகிறது’ என்று அறிபவர்களுக்கு, மூவடி அளந்த புஷோத்தமன் தன் அருளை வழங்குகிறான்.
இத்தகையவன் இருப்பிடம் கண்டம் எனும் திருப்பதியாகும் என்பர் பெரியாழ்வார்.(விளக்கம்-மதி சீனிவாசன்)
